கைகளில் மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் சில பேஷண்டுகள் நாற்காலிகளில் காத்திருக்கின்றனர். ‘டாக்டர் ரங்கபாஷ்யம், சைக்கியாட்ரிஸ்ட்’ என்ற எழுத்துக்கள் பித்தளையில் மின்னுகின்றன. டாக்டர் ‘IN’-ல் இருக்கின்றார். சுவரில் ‘ON APPOINTMENT ONLY,’ ‘SILENCE PLEASE’ என்ற அறிவிப்புகள். அந்த நடுத்தர வயது மனிதர் பரபரப்பாக, அமைதியின்றி உட்கார்ந்திருக்கின்றார். கதவின் முன் டேபிள் போட்டுச் சேரில் அமர்ந்திருக்கும் நர்ஸ் அவரைப் பார்த்து, ‘கொஞ்சம் பொறுமை’ என்று சைகை செய்கின்றாள். உள்ளே டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்த நோயாளி வெளியே வருகின்றார். கூடவே இன்னொருவரும் பின்தொடர்ந்து வருகின்றார்.
NURSE
சார் நீங்க போங்க...
அந்த நபர் அதற்கெல்லாம் அவசியமேயில்லாமல் அவசரமாக உள்ளே செல்கின்றார்.